ஈழ மணித் திருநாட்டின் எழில்முடியாக விளங்கும் யாழ் நகரை அடுத்து செந்தமிழும் சீர்பெருகு சைவமும், தழைத்தோங்கும் தென்மராட்சிப் பிரதேசத்தில் வளம் நிறைந்து விளங்கும் தென்மட்டுவிலில் வல்லிபுரம் தங்கம்மா ஆகிய பெற்றோருக்கு இளைய மகனாக 18.11.1930இல் தோன்றினார். இவருக்கு ஒரேயொரு மூத்த சகோதரி காலஞ்சென்ற காமாட்சி சதாசிவம்.
இவர் பிறந்த சொற்ப காலத்தில் தாயார் காலமாகிவிட்டார். அதன் காரணமாக சிறிய தாய், சிறிய தகப்பன் இவர்களையும் வளர்த்து வந்தார்கள்.
இவர்கள் ஆரம்பக் கல்வியை கைதடி நுணாவில் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் பின் டிறிபேக் கல்லூரியிலும், மேற்படிப்பை யா/பரமேஸ்வராக் கல்லூரியிலும் பயின்றனர்.
அதன்பின் திருநெல்வேலி பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்று ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார். தனது 29வது வயதில் சாவகச்சேரியை சேர்ந்த பாபதி-பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியான ஆசிரியை நாகம்மா என்பவரைத் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையை சிறப்புடன் நடத்தினார்.
இன்பக்கலா, இன்பதாஸ், இன்பறாஜ் ஆகியோரைப் பெற்று அவர்களுக்கு உயர்கல்வியைக் கொடுத்து, சிறந்த குணசீலராக வாழ வைத்தார். கல்வியிலும் பண்பிலும் மேன்மையுள்ள மருமக்களையும் தேடி மணம் முடித்து வைத்த பெருமை அவரையே சாரும்.
1998ம் ஆண்டு மனைவியுடன் லண்டன் வந்து ஒரு தனிவீட்டில் இருந்து, பேரப்பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று, கூட்டி வரும் கடமையை செவ்வனே செய்தார்.
அன்னார் மிகவும் கடவுள் பக்தியுடையவர். அண்மையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலுக்கு, வெள்ளிக்கிழமைகளில் மனைவியுடன் போய் வருவார். சிறியோர் முதல் பெரியோர் வரை தன் அன்பால் வசியப்படுத்துவார். அதிகம் பேசமாட்டார் அமைதியாகவிருந்து எல்லாவற்றையும் அறிந்துகொள்வார். முதுமை அடையும்போது உடல் வலிமையை இழந்து வருவது இயற்கையின் நியதி. அன்னார் தானும் கஷ்டப்படாது ஏனையோரையும் கஷ்டப்படுத்தாது மனைவியுடன் கதைத்துக்கொண்டு இவ்வுலகை நீத்தார்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!